Thursday, February 3, 2011

Dont Hurt Others through Your Words

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்..

ஒரு சிறுவன் இருந்தான். பெரிய கோவக்காரன். எப்போது சினம் கொண்டாலும் சினம் வரச் செய்தவரைத் திட்டித் தீர்த்துவிடுவான். அவன் தந்தை ஒரு நாள் அந்தச் சிறுவனை அழைத்து ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்து 'தம்பி. இனி மேல் ஒவ்வொரு முறை நீ யாரையாவது கோவித்து சுடுவார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் நம் வீட்டு வேலியில் இந்தப் பையிலிருந்து ஒரு ஆணியை எடுத்து அறைய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் ஒரு ஆணியையும் அறையாமல் இருந்தால் அப்போது எனக்கு வந்து சொல்' என்று சொன்னார். பையனும் அப்படியே செய்து வந்தான்.

முதல் நாள் வேலியில் 37 ஆணிகள் இருந்தன. மறு நாள் அந்த எண்ணிக்கை குறைந்தது. நாட்கள் செல்ல செல்ல ஆணியை அறைவதை விட சினத்தை அடக்குவதும் சினம் கொள்ளாமல் இருப்பதும் பையனுக்கு எளிதாக இருந்தது. சில வாரங்களில் சினம் கொள்வதே இல்லாத நாட்களும் வந்தன. ஆணிகளை அறைவதும் நின்றது. ஒரு மாதம் எந்த ஆணியும் அறையாமல் நாட்கள் சென்ற பின் தன் தந்தையிடம் பையன் சென்று சொன்னான். மிக்க மகிழ்ந்த அந்தத் தந்தை 'மகனே. இப்போது உனக்குப் புதிய வேலை. நீ அறைந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு. எல்லா ஆணிகளும் பிடுங்கிய பின் வந்து சொல்' என்றார். ஆணிகளை அறைவதை விட அதைப் பிடுங்குவது பெரும் வேலையாக இருந்தது. எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பின் தந்தையிடம் வந்து சொன்னான் சிறுவன். தந்தை அவனை அழைத்துக் கொண்டு வேலி அருகில் சென்று 'பார்த்தாயா. நீ எல்லா ஆணிகளையும் பிடுங்கி விட்டாய். ஆனாலும் ஒவ்வொரு ஆணி இருந்த இடத்திலும் ஒரு துளை இருப்பதைப் பார். இந்த துளைகள் அவ்வளவு விரைவில் மறையாது. நீ சினம் கொண்டு சுடு சொற்கள் சொல்வது இந்த வேலியில் ஆணிகளை அறைவது போலத் தான். எவ்வளவு தான் ஆணிகளை அறைந்த பின் அவற்றை நீக்குவது போல் மன்னிப்பு கேட்டாலும் இந்த வேலியில் இருக்கும் துளைகளைப் போல் சினத்தினால் ஏற்பட்ட வடுக்கள் என்றுமே மனத்தில் இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்'.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.


நன்றி "கூடல்"