Monday, June 1, 2015

EACH IS GREAT IN HIS OWN PLACE



கர்மயோகம் - அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!



இறைவனை வழிபடுவதற்காக உலகத்தைத் துறந்து செல்கின்ற ஒருவன் உலகத்தில் வாழ்ந்து உலகின் நன்மைக்காகச் செயல் புரிந்துகொண்டிருப்போர் எல்லாம் இறைவனை வழிபடாதவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுபோலவே குடும்பத்தில் மனைவி மக்களோடு வாழும் இல்லறத்தான் உலகைத் துறந்து வாழும் துறவியரைப் பயனற்ற நாடோடிகள் என்று கருதக்கூடாது. அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் பெரியவரே இந்தக் கருத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.

ஓர் அரசன் தன் நாட்டிற்கு வரும் துறவிகளை எல்லாம் உயர்ந்தவன் யார்? உலகைத் துறந்து துறவியானவனா? உலகில் வாழ்ந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா? என்று கேட்பது வழக்கம் அறிவாளிகள் பலர் அந்தச் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வந்தார்கள் சிலர் துறவிகளே சிறந்தவர்கள் என்றனர். அரசன் அவர்களின் கூற்றை நிரூபிக்கச் சொன்னான் அவர்களால் முடியாமல் போகவே அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டான் வேறு சிலர் வந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானே சிறந்தவன் என்று கூறினர். அதையும் அரசன் நிரூபிக்கச்சொன்னான் அவர்கள் நிரூபிக்காதபோது அவர்களையும் இல்லறத்தார்களாக வாழும்படிக் கட்டளையிட்டான்.

கடைசியாக ஒரு நாள் இளம்துறவி ஒருவர் அரசனிடம் வந்தார். அவரிடமும் அரசன் தன் கேள்வியைக் கேட்டான் அதற்கு அந்தத் துறவி மன்னா அவரவர் நிலையில் இருக்கும்போது இருசாராரும் சம அளவில் உயர்ந்தவர்களே என்றார் அரசன் அதை நிரூபியுங்கள் என்றான் அதற்கு அந்த இளம் துறவி நான் அதை நிரூபிக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ வேண்டும் அப்போது நான் கூறியதை நிரூபிக்க வசதியாக இருக்கும் என்றார் அரசன் அதனை ஏற்றுக்கொண்டு துறவியுடன் புறப்பட்டான் இருவரும் அந்த நாட்டைக் கடந்து மேலும் பல நாடுகளைக் கடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள் அப்போது அந்த நாட்டின் தலைநகரில் ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் வாத்திய இசையும் பாட்டும் ஆரவாரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்டோரா போடுபவனின் குரலும் இடையில் கேட்டது மக்கள் கண்ணைப் பறிக்கும் ஆடைகளோடு கூடியிருந்தனர். அவர்கள் முன்னால் அவன் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மன்னனும் துறவியும் அங்கே சென்றனர் அந்த நாட்டு மன்னனின் மகளுடைய சுயம்வரம் நடைபெறப் போகிறது என்பதையே அவன் அங்கே அறிவித்துக் கொண்டிருந்தான்.

சுயம்வரத்தில் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில் பண்டைய வழக்கமாக இருந்தது. தனக்குக் கணவனாக வரப்போகின்றவன் இப்படியிருக்க வேண்டும் என்று ஒவ்வோர் அரச குமாரியும் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாள் சிலருக்கு ஈடற்ற அழகன் வேண்டும், சிலருக்கு அறிவில் சிறந்தவன் வேண்டும், சிலருக்குப் பெரிய செல்வந்தன் வேண்டும். அண்டை அயல்நாடுகளின் ராஜகுமாரர்கள் எல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்கு வருவார்கள் சிலவேளைகளில் அவர்கள் தங்களுடன் ஓர் அறிவிப்பாளனையும் அழைத்து வருவார்கள் அவன் அந்த ராஜகுமாரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அந்த இளவரசி அவனை மணந்து கொண்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதை அறிவிப்பான் ராஜகுமாரி அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அமர்ந்தபடி ஒவ்வொரு ராஜகுமாரனிடமும் வந்து அவனைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்பாள் திருப்தி அடையாவிட்டால் முன்னே செல்லுங்கள் என்று பல்லக்கு சுமப்பவர்களிடம் கூறுவாள் நிராகரிக்கப்பட்ட ராஜகுமாரர்களைப் பின்னர் பார்ப்பதே இல்லை தனக்குப் பிடித்தவனைக் கண்டுகொண்டால் உடனே அவன் கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவிப்பாள் அவன் அவளை மணப்பான்.

நமது துறவியும் மன்னனும் சென்ற அந்த நாட்டின் இளவரசிக்கும் இந்தச் சுயம்வர விழா தான் நடந்து கொண்டிருந்தது. அவள் உலகிலேயே பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள் அவளை மணந்து கொள்பவன் அவளுடைய தந்தைக்குப் பிறகு அந்த நாட்டின் அரசன் ஆவான் அவள் பேரழகன் ஒருவனை மணக்க விரும்பினாள் இதற்கு முன்பும் எத்தனையோ சுயம்வரங்கள் நடந்தன அவளுக்கு யாரையும் பிடிக்க வில்லை அவளால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை இந்தச் சுயம்வரம் முன் நடந்த எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாக இருந்தது. முன்பை விட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர் ராஜகுமாரி பல்லக்கில் அமர்ந்து ஒவ்வொருவராகப் பார்த்தாள் ஆனால் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டாள் இந்த முறையும் சுயம்வரம் தோல்வி தானோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.

அப்போது அந்த மண்டபத்திற்குள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும் அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது சூரியனே வானத்தை விட்டுப் பூமியில் வந்ததுபோல் இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று அவர் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே வந்த இளவரசி அவரது அழகில் தன்னைப் பறிகொடுத்து கையிலிருந்த மாலையை அவர் கழுத்தில் சூட்டினாள் இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துளவி அதிர்ச்சியுற்றவராக என்ன முட்டாள்தனம் இது ? நான் ஒரு துறவி எனக்னென்ன திருமணம் என்று கூறிமாலையைக் கழற்றிக் கீழே எறிந்தார். இதைக் கண்ட அந்த நாட்டு அரசர் இந்தத் துறவி ஏழையாக இருப்பதால் இளவரசியை மணந்துகொள்ள பயப்படுகிறான் என்று நினைத்து என் மகளை மணந்து கொண்டதும் இந்த நாட்டில் பாதி உனக்குச் சொந்தமாகும் நான் இறந்த பிறகு முழு நாடும் உனக்கே என்று கூறி அந்த மாலையை எடுத்து மறுபடியும் அந்தத் துறவியின் கழுத்தில் போட்டான் துறவியோ மீண்டும் மாலையைக் கழற்றிக் கீழே வீசியெறிந்து மடத்தனம் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் இதற்குள் இளவரசி அந்தத் துறவியிடம் அளவற்ற காதல் கொண்டுவிட்டாள் ஒன்று நான் அவரை மணந்து கொள்ள வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று கூறியபடியே அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவர் பின்னாலேயே சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் துறவி தான் அழைத்து வந்த அரசனைப் பார்த்து மன்னா! நாம் அந்த இருவரையும் தொடர்ந்து செல்வோம் என்று கூறினார். பின்னர் இருவரும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.

இளவரசியை மணக்க மறுத்த இளந்துறவி நகரத்தை விட்டுப் பல மைல் தொலைவு நடந்துபோய் விட்டார். ஒரு காட்டின் அருகே வந்ததும் அதற்குள் நுழைந்தார் தொடர்ந்து வந்த இளவரசியும் காட்டிற்குள் நுழைந்தாள். நமது துறவியும் அரசனும் பின்தொடர்ந்தனர். அந்த இளந்துறவிக்குக் காடும் குறுகிய பாதைகளும் அத்துபடியாக இருந்தது சட்டென்று அவற்றுள் ஏதோ ஒருவழியில் நுழைந்து மறைந்துவிட்டார் இளவரசியால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை காடு முழுவதும் அலைந்து திரிந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெளியேறவும் வழியறியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள் அப்போது நமது துறவியும் அரசனும் அவளிடம் சென்று அழாதே நீ வெளியே செல்ல நாங்கள் வழி காட்டுகிறோம் இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் வழி காண்பது சிரமம் இதோ பெரிய மரம் ஒன்று உள்ளது இதனடியில் இன்றிரவு தங்கலாம் காலையில் உனக்கு வழி காட்டுகிறோம் என்றனர்.

அந்த மரத்தில் ஒரு குருவியும் அதன் மனைவியும் மூன்று குஞ்சுகளும் ஒரு கூட்டில் வாழ்ந்து வந்தன அந்தச் சின்னஞ்சிறு குருவி மரத்திற்குக் கீழே வந்து தங்கியுள்ள மூவரையும் பார்த்துத் தன் மனைவியிடம் என் அன்பே இப்போது என்ன செய்வது நம்வீட்டில் சில விருந்தினர் வந்துள்ளனர் இது குளிர்காலம் வேறு நெருப்புக்கூட இல்லையே என்று கவலையுடன் கூறியது பின்னர் எங்கோ பறந்து சென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுள்ளியைக் கொண்டுவந்து அந்த மூன்று பேருக்கும் முன்னால் போட்டது அவர்கள் மேலும் சில சுள்ளிகளைச் சேர்த்துத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்தார்கள்.

அப்போது குருவிக்கு மனநிறைவு ஏற்பட வில்லை மீண்டும் அது தன் மனைவியைப் பார்த்து அன்பே இப்போது என்ன செய்வது? அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லையே நாமோ இல்லறத்தினர் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தாக வேண்டும் என் உடம்பை அவர்களுக்கு உணவாகத் தருகிறேன் என்று கூறியபடி அவர்கள் வளர்த்திருந்த நெருப்பில் பாய்ந்து மாண்டது மரத்தடியிலிருந்த மூவரும் அந்த குருவி நெருப்பில் வீழ்வதைப் பார்ததார்கள் தடுக்கவும் முயன்றார்கள் ஆனால் குருவி மிக வேகமாக நெருப்பில் வீழந்துவிட்டது.

அந்தக் குருவியின் மனைவி தன் கணவனின் செயலைப் பார்த்தது. பின்னர் இங்கோ மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு சிறிய பறவையின் உடல் எப்படி அவர்களது பசியைத் தீர்க்கும் அது போதாது என் கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியான என் கடமை அவர்களுக்கு என் உடலும் கிடைக்கட்டும் என்று கூறித் தானும் தீயில் வீழ்ந்தது.

நடந்தவை அனைத்தையும் மூன்று குஞ்சுகளும் கண்டன . தங்கள் விருந்தினர்களுக்குப் போதுமான உணவு இல்லாததைக் கண்ட அவை நம் பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் அப்படியும் உணவு போதவில்லை பெற்றோரின் பணியைத் தொடர்வது நம் கடமை நமது உடலும் போகட்டும் என்று பேசிபடியே மூன்றும் அந்த நெருப்பிற்குள் வேகமாக வீழந்து இறந்தன.

நடந்ததைக் கண்டு திகைத்த அந்த மூவருக்கும் அந்தக் குருவிகளின் உடலைத் தீண்டவும் மனம் வரவில்லை உணவு எதுவும் இன்றியே அவர்கள் இரவைக் கழித்தனர். பொழுது விடிந்ததும் துறவியும் அரசனும் இளவரசி வெளியேற வழிகாட்டினர் அவள் தன் தந்தையிடம் திரும்பினாள்.

பின்னர் நமது துறவி அரசனிடம் மன்னா தான் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்டாய் அல்லவா? நீ இல்லறத் தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல் எந்த வினாடியும் பிறருக்காக உன்னைத் தியாகம் செய்வதற்குத் தயாராக வாழ வேண்டும் உலகைத் துறந்து வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளந்துறவியைப்போல் இரு இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பித்து விடு துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ பணத்தையோ பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே அவரவர் நிலையில்அவரவர் பெரியவரே ஆனால் ஒருவரின் கடமை மற்றவரின் கடமை ஆகாது என்றார்.


No comments:

Post a Comment