Friday, January 27, 2017

காவல்துறையை வசைபாடும் முன் சற்று சந்திப்பீர்....

கலவரத்தில் ஈடுபட்ட அத்தனை காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை......   அவர்கள் செயல் எந்த வகையிலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை

அதேப்போல் ஒரு சில காவலர்கள் தவறு செய்தார்கள் என்பதற்க்காக ஒட்டுமொத்தமாக அத்தனை காவலர்களையும் துரோகிகள்/அரக்கர்கள்  என்று வசைபாடுவது ஏற்க முடியவில்லை.......!

மழை, வெள்ளம்,புயல், என்று பாராமல்  24/7 நமக்காக உழைத்து கொண்டு இருப்பவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி இது தானா....?

உண்மையில் போராட்டம் அறவழியில் நடந்ததால் காவல்த்துறையினர் அவர்களது முழு ஒத்துழைப்பையும் தந்தார்கள் அல்லவா......

போராட்டத்தை கலவரத்தில் தான் முடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வதந்திகள் பரப்பி கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் மறுக்க இயலாது.....

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்று எந்த காவல் துறை அதிகாரிகளோ, தமிழக  அரசோ சொல்லவில்லை......    ஏன் என்றால் அரசுக்கும், காவல் துறைக்கும் தெரியும் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வைத்து தாக்குபவர்கள் அல்ல...... மாறாக  அஹிம்சை முறையில் போராடி வெற்றி பெறுபவர்கள்......

மாணவர்களின் போராட்டம் அமைதியாக வெற்றியடைந்து விட கூடாது என்பதில் ஒரு சில சமூக விரோத அமைப்புகள் முனைப்போடு இருத்தது..... அதனால் தான் காவல்துறையினர் பெண்கள்/குழந்தைகள் மேல்  தடியடி நடத்தியாக வதந்திகள் பரப்பி கலவரத்திற்கு தூபம் இட்டார்கள்......  (இந்த வதந்தி ஆறு நாட்களாகவே பரப்பி கொண்டு தான் இருந்தார்கள்). இவர்களுக்கு உதவும் விதத்தில் ஒரு சில கேடுகெட்ட தொலைக்காட்சிகளில், 'மாணவர்கள் மீது போலீசார் தடியடி' என தவறான செய்தி பரப்பினர்.   இந்த செய்தியின் தாக்கத்தால்  'சீல்' வைக்கப்பட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்டு வன்முறையை வெடிக்க வைத்தனர்.

லத்தியில்லாமல் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். காலியான 'சின்டெக்ஸ்' குடிநீர் தொட்டிகளை ரோடுகளில் உருட்டி விட்டனர்.  காவல் நிலையம் மேல் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன, அவர்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டன.....  இவையெல்லாம் நியாயமா சிந்திப்பீர்....? ஏன் காவலர்களுக்கு உயிர் இல்லையா..... அவர்களுக்கும் குடும்பம் இல்லையா, இவர்கள் மட்டும் தாக்கப்படலாமா..?   இன்று கலவரக்காரர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் ஏன் கலவரத்தில் பாதிக்கப்பட்ட காவல்துறை பற்றி சிந்திக்க மறந்திர்கள்...... 

கலவரக்கார்கள் திட்டமிட்டு காவலர்கள் மேல் தாக்கும்போது காவலர்கள் என்ன செய்ய முடியும்....? ஒன்று திரும்பி தாக்கி கலவரம் செய்பவர்களை  ஒடுக்க வேண்டும் அல்லது அவர்களிடம் அடிபட்டு சாக வேண்டியது தான்.....

காக்கி உடையணிவதால் அவர்கள் வேறு யாரோ என்று நினைக்க வேண்டாம், அவர்களும் தமிழர்கள் தான்..... அவர்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கு, அவர்களுக்குள் ஓடுவது தமிழ் ரத்தம் தான்....

இதில் எத்தனை பேருக்கு கடந்த ஆண்டு ஆம்பூரில் நடந்த கலவரம் தெரியும் என்று தெரியவில்லை.... அன்று வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்ட காவல் துறையினர் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்பட்டனர்... அத்தனை காவலர்களையும் கடுமையாக தாக்கினார்கள் கலவரக்கார்கள்..... ஆண் காவலர், பெண் காவலர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் தாக்கபட்டனர்.... அந்த தாக்குதலில் பெண் காவலர்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளுக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்...... இன்று காவலர்களுக்கு எதிராக MEME'ஸ் போடுபவர்கள் அன்று எங்கு சென்று இருந்தார்கள்...?  கலவரம் செய்தவர்கள் ஆதரவாக ஒரு கோஷ்டி வந்து வழக்கு போட கூடாது என்கிறார்கள்.. அரசும் வாக்கு வங்கி பாதிக்கும் என்று பயந்து நடவடிக்கை எடுக்க முனைப்பு அன்று காட்டவில்லை.... அப்பொழுது மனித உரிமை ஆர்வலர்கள் எங்கு சென்றார்கள்.... ? இப்படி பல நிகழ்வுகள் உண்டு..... எல்லா சந்தர்ப்பங்களும் காவல் துறையினர் தாக்கப்படும் போது அவர்களுக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை மாறாக கலவரக்கார்கள்  மேல் வன்முறை என்று தான் காவலர்கள் மேல் குற்றம் சாட்டப்படுகிறார்கள்  .....(கலவரக்கார்களுக்கு வந்தால் ரத்தம், காவலர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா......? இது எந்த வகையில் நியாயம்..?)

இன்று காவல்துறையை கடுமையாக வசைபாடும் அன்பர்களே, அடுத்து வரும் நாட்களில் நீங்கள் திருவிழா, அரசியல் தலைவர் பொதுக்கூட்டம், கும்பாபிஷேகம்,  போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு பந்தோபஸ்துக்கு வரும் காவலர்களை எங்காவது பார்த்ததால் அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி பாருங்கள் அவர்கள் வலி உங்களுக்கு தெரியும்...... 

கோவையில் பிரதமர் வருகிறார்கள் என்றால் வேலூரில் இருந்து காவலர்கள் அழைத்து வருகிறார்கள்.... ஏன் கோவையில் பந்தோபஸ்து அளிக்க போதிய காவலர்கள் இல்லையா..... உண்மையில் இல்லை, எந்த ஒரு மாவட்டத்திற்கும் போதிய காவலர்கள் இருப்பு இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்....... எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும்   பக்கத்துக்கு மாவட்டங்களில் இருந்து தான் காவலர்கள் அழைத்து வருகிறார்கள்.....  அப்படி பக்கத்துக்கு மாவட்டத்திற்க்காக வரும் காவலர்கள் உண்ண உணவு நடு தெருவில் தான்....   ஒய்வு அப்படினா என்ன .... என்பது தான் அவர்கள் பதில், பந்தோபஸ்திற்கு வரும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க படும் அவஸ்தை பற்றி என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா.....? , வெயில் மழை என்று பாராமல் எத்தனை மணி நேரம் நின்று கொண்டு இருக்க வேண்டும் என்று தெரியுமா, முக்கிய தலைவர்  ஒருவர் மாலை வருவதற்கு காலை முதல் நின்று கொண்டு இருக்க வேண்டும்,   ஒரு வேலை இவர்கள் எங்காவது அசந்து தூங்கிவிட்டால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் காவலர்கள் அலட்சியம் என்று பரப்பி அவர்கள் வேலைக்கே உலை வைப்போம்..... நன்றி கேட்ட மனிதர்கள் நாம்.....

அரசு துறைகள் அத்தனைக்கும் அவர்களின் குறைகளை  வெளிப்படுத்த தனி தனி சங்கங்கள் இருக்கு, ஆனால் தங்கள் குறைகளை வெளிப்படுத்த முடியாத ஒரே அரசு துறை காவல்துறை மட்டும் தான்..... ஏன்யென்றால் காவல் துறைக்கு சங்கங்கள் அமைக்க தடை.....    ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் எத்தனை நடைமுறைகள் அவர்கள் கடக்க வேண்டியிருக்கும் என்று தெரியுமா....?  அப்படி வாங்கும் விடுமுறையும் முழுதாக அவர்கள் கழிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை......

எத்தனையோ தருணங்களில் நமக்கு காவல் துறை உதவி செய்து இருந்திருக்கிறது, என்றாவது அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்து இருக்கிறோமா.......   ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக அத்தனை காவலர்களையும் வசைபாட தான் நம்மால் முடியும்....  தவறு செய்யும் காவல்துறையினர் மேல் புகார் அளிப்போம், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க போராடுவோம்..... அது நம் உரிமை....... அதை விட்டு அத்தனை பேரையும் வசைபாடி நமக்கென்ன லாபம் கிடைத்து விடப்போகிறது ...?  

காவலர்களும் மனிதர்கள் தான்.... அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள் அவர்கள் வலி உங்களுக்கு தெரியும்.......

-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:

Post a Comment